தீ விபத்தில்



 (க.கிஷாந்தன்)

யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டியாந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த கடையும், அதன் அருகில் இருந்த களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளின் தீயணைப்பு பிரிவினரும், ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரும், யட்டியாந்தோட்டை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்