போக்குவரத்து முழுமையாக தடை


 


(க.கிஷாந்தன்)

 

தலவாக்கலையிலிருந்து  ராவணாகொட ஊடாக நாவலப்பிட்டிய மற்றும் கொத்மலை செல்லும் வீதியில் கலப்பிட்டிய பகுதியில் இன்று (2.10.2020) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.

 

இப்பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால் 5 நாட்களுக்கு வீதி மூடப்பட்டிருக்கும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ச்சியாக இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வீதியினை பயன்படுத்தும் பயணிகள் மாற்று வீதியினை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராவணகொட வீதி மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

 

பத்தனை, போகாவத்தை ஆகிய பகுதிகளிலிருந்து இராவணகொட கலப்பிட்டிய வழியாக நாவலப்பிட்டி மற்றும் மல்தெனிய, மகாவெலிகம, பெல்டன், ரொஜஸ்டன்கம, ஹரங்கல ஆகிய பிரதேசத்திற்கு செல்லும் பிரதான வீதியில் கலப்பிட்டிய எனும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு வீதி சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகளும், பொது மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

 

மேலும், மழைகாலங்களில் இவ்வீதியினூடாக வாகனங்களை செலுத்த முடியாதென வாகன சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.