வழக்குத் தாக்கல்


 


வி.சுகிர்தகுமார்

தேசிய டெங்கொழிப்பு வார வேலைத்திட்டத்திற்கிணங்க ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்றுவரை குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட 1057 இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் 16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி  எஸ்.அகிலன் தெரிவித்தார்.


மேலும் 46 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டதுடன் 48 மணித்தியாலங்களுக்குள்  துப்பரவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டதாகவும்   டெங்கு பரவும் அபாய இடங்களாக  143 குடியிருப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.


நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.


இந்நிலையில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்;கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் டெங்கொழிப்பு சிரமதானங்களை மேற்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி  எஸ்.அகிலன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பரிசோதனை நடவடிக்கையினையும் துரிதப்படுத்தி வருகின்றனார்.


இதற்கமைவாக 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரை டெங்கொழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளார்.


அத்தோடு மதஸ்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களிலும் டெங்கொழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த நடவடிக்கைகளில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் பொலிசார் என பலரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேநேரம் வருமுன் காப்போம் எனும் முதுமொழிக்கேற்ப மக்கள் செயற்பட வேண்டும் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.


தற்போது டெங்குவின் தாக்கம் அதிகமாக காணப்படாத போதிலும் அதற்கான சாத்தியம் காணப்படுவதாக கூறினார்.


ஆகவே மழை ஆரம்பிக்க முன்னர் மக்கள் தங்களது சுற்றச்சூழலை துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்வது கட்டாயமானது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.