அமெரிக்கத் தேர்தலுக்கிடையில், பதற்றம்


 


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் போட்டிக்களத்தின் முக்கிய மாகாணங்களாக கருதப்படும் மாகாணங்களில் வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

போர்ட்லாண்டு, ஓரிகன் ஆகிய பகுதிகளில், டிரம்புக்கு எதிராக நடைபெற்ற `ஒவ்வொரு ஓட்டும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்` போராட்டத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கு சிலர் கூட்டத்திலிருந்து விலகி, சில கடைகளின் ஜன்னல்களை உடைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு கலவரம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மினியாபோலிஸில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 200 போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் டிரம்பிற்கு எதிராகவும், வாக்கை நிறுத்துமாறு டிரம்ப் கூறியதற்கு எதிராகவும் போராடினார்கள் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல நியூயார்க், ஃபிலடெல்ஃபியா மற்றும் சிகாகோவிலும் போராட்டங்கள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஃபீனிக்ஸ் மற்றும் அரிசோனாவில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான சிறியதொரு போராட்டமும் நடைபெற்றது. டெட்ராய்டில் டிரம்பின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று ஜன்னலில் இருந்து வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர்.