28 பேருக்கு கொரோனா தொற்று


 


(க.கிஷாந்தன்)

வட்டவளை பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு 24.12.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் 25.12.2020 அன்று கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரியவருகிறது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 14 ஆம் திகதி பணிப்புரிந்த வட்டவளை மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.