வாழைப்பழ கூழுக்குள்,கொக்கைன்



சுமார் 100 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புள்ள (இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 1000 கோடி ரூபாய்) கொக்கைனை, வாழைப் பழக் கூழுக்குள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக, பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் கூறியது.


கடந்த 12 நவம்பர் 2020 அன்று, எஸ்ஸெக்ஸ் கவுன்டியில் இருக்கும் லண்டன் கேட்வே துறைமுகத்தில் வழக்கமாக சோதனைகளை மேற்கொண்ட போது, 1000 கிலோவுக்கு மேல் எடை கொண்ட கொக்கைன் போதைப் பொருளை கண்டு பிடித்தார்கள்.


இந்த போதை பொருட்கள், கொலம்பியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்து இருக்கிறது. அடுத்து பெல்ஜியத்தில் இருக்கும் ஆண்ட்வெர்ப் நகரத்துக்குச் செல்ல இருந்தது என, பிரிட்டனின் சுங்கத் துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.


இந்த போதைப் பொருளைக் கண்டு பிடித்தது, கடத்தலில் ஈடுபட்டுள்ள குற்ற அமைப்புகளுக்கு மிகப் பெரிய அடியாக இருக்கும் என பிரிட்டனின் என்.சி.ஏ என்றழைக்கப்படும் நேஷனல் க்ரைம் ஏஜென்சி கூறியது.


கடந்த செப்டம்பர் 2020 காலத்தில், பிரிட்டனின் எல்லை பாதுகாப்புப் படையினர் 1,155 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதைப் பொருளை, இந்த துறைமுகத்தில் கண்டு பிடித்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு டன்னுக்கும் அதிக எடை கொண்ட கொக்கைன் போதைப் பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


இந்த போதை பொருட்கள், பிரிட்டனுக்கு வரவில்லை என்றாலும், இதன் ஒரு சிறிய பகுதியாவது பிரிட்டனில் விற்கப்பட்டு இருக்கலாம் என என்.சி.ஏ கிளையின் கமாண்டர் ஜேக் பீர் கூறினார்.


மேலும் பேசியவர் "இந்த போதைப் பொருட்கள் பறிமுதல் இரண்டுமே கணிசமாகப் பெரியது. இது குற்ற அமைப்புகளுக்கு மிகப் பெரிய அடியாக இருக்கும். அதாவது மீண்டும் தங்கள் போதை மருந்து கடத்தல் தொழிலில் முதலீடு செய்ய, குறைந்த அளவிலான லாபமே மிஞ்சும்," எனக் கூறினார் ஜேக் பீர்.