டெல்லி விவசாயிகள் போராட்டக்காரர் ஒருவர் பலி


 


குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு இன்று (ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை) காலை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தன. இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த கைகலப்பில் 86 அதிகாரிகள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், போராட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

சுமார் 6-7 இடங்களில் இருந்து தனித்தனியே புறப்பட்ட டிராக்டர் பேரணிகளில் ஒன்று பகல் சுமார் 12 மணி அளவில் மத்திய டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதி வரையும், அடுத்து மதியம் இரண்டு மணியளவில் செங்கோட்டை பகுதியையும் அடைந்தன.

டெல்லியிலுள்ள செங்கோட்டையில் குவிமாடத்தில் ஏறி தங்களது வசமிருந்த கொடியை ஏற்றும் போராட்டக்காரர்கள்
படக்குறிப்பு,

டெல்லியிலுள்ள செங்கோட்டையின் குவிமாடத்தில் ஏறி தங்களது வசமிருந்த கொடியை ஏற்றும் போராட்டக்காரர்கள்

இந்த நிலையில், டிக்ரி எல்லையில் இருந்து புறப்பட்ட பேரணியின் நீளம் மட்டும் 30 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் என்பதாக விவசாயிகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தியாளர் கூறினார்.