கல்முனையில்,தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகள் இன்று(24) மாலை 6 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட   குறித்த  பிரதேச  வீதிகள்  சில கடந்த காலங்களில்  வெறிச்சோடி   பொலிஸார் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதிகளாக இருந்த நிலையில் தற்போது விலக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இதே வேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவுக்கு மேற்குறித்த இப் பிரதேசங்களில் கொவிட்-19 தொற்று  நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டதனை தனது உத்தியோகபூர்வ முகநூலில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜீ. சுகுணன்   வெளியிட்டுள்ளார்.  

மேலும் கடந்த காலங்களில்  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை 27 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்  இன்று  நீக்கப்பட்டுள்ளதுடன் மூடப்பட்ட கடைத்தொகுதி உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை விரைவில் சுகாதார நடைமுறைகளுக்கமைய மூடப்பட்ட கல்முனை பிரதான நகர் சந்தை தற்போது திறப்பதற்கான ஒழுங்குகளை உரிய தரப்பினர் எடுத்துள்ளனர்.

மேற்குறித்த தனிமைப்படுத்தல் சட்டத்தினை  நீக்குவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கிய சுகாதார தரப்பினருக்கு கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டமானது  கல்முனை பிரதேசத்தில்   அதிகரித்து வந்த  கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு கடந்த  (27 இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளக வீதிகள் பிரதான வீதிகளில்  போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இதே வேளை கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்றம் நிறைவுற இரு நாட்கள் உள்ள நிலையில் மக்கள் அதிகளவாக  ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்காக இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.