வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு


 


(க.கிஷாந்தன்)

 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூண்டுலோயா நகரில் இன்று (24.01.2021) போராட்டம் நடைபெற்றது.

 

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் தோழர் மஞ்சுள சுரவீர தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

" வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கவேண்டிய அரசாங்கம், மாறாக பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது. இதனை எம்மால் ஏற்கமுடியாது. ஆகவே, பொருட்கள், சேவைகளின் விலைகள் உடன் குறைக்கப்படவேண்டும்." - என்று போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

 

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் ஆளும் வர்க்கமும், தொழிற்சங்கங்களும் இம்முறையும் கைவிரிப்பதற்கு முயற்சிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் அவர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும். நில உரிமை என்பது அரசாங்கத்திடமே இருக்கின்றது. எனவே, அரசால் கொள்கை ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கம்பனிகள் ஏற்கவேண்டும்." - என்றும் அவர்கள் குறிப்பிட்டார்.