பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது


 


மக்களின் அதிகப்படியான வாக்குகளைப்பெற்று, இந்திய சதுரங்க வீராங்கனையான கொனெரு ஹம்பி, இந்த ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெறுகிறார்.

கொனேரு ஹம்பியின் பெயருடன், தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் மற்றும் தற்போதைய இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ஆகியோரின் பெயர்களும் நேயர்களின் வாக்குகளை பெற பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

2020ஆம் ஆண்டு, கைரஸ் கோப்பையை வென்றார் கொனெரு ஹம்பி. உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியின் தற்போதைய வெற்றியாளர் இவரே.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வெற்றியை அவர் அடைந்தார். இரண்டு வருட மகப்பேறு இடைவேளைக்குப் பிறகு அவர் இந்த சாதனையைப் புரிந்தார்.

"ஒரு அரங்கத்திற்கு உள்ளே விளையாடப்படும் விளையாட்டு என்பதால், இந்தியாவில் கிரிக்கெட் அளவிற்கு சதுரங்கம் பெரிய கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், இந்த விருதின் மூலமாக, அதிகப்படியான மக்களை இந்த விளையாட்டு ஈர்க்கும் என்று நம்புகிறேன்." என்று விருதுபெற்ற ஹம்பி தெரிவித்தார்.

வளர்ந்துவரும் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், "விளையாட்டை ரசித்து ஆடுங்கள் என்ன முடிவு வரும் என்பது குறித்து கவலை கொள்ளாதீர்கள். ஆட்டத்தின் முடிவை எட்ட முயலுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மரியாதையையும், அங்கீகாரத்தையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டும். தைரியமாக இருங்கள், உங்கள் இலக்கை நோக்கியே இருங்கள்." என்றார்.

கொனெரு ஹம்பி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கொனேரு ஹம்பி. இளம் வயதில் இவரது தந்தை இவரின் திறமையை அடையாளம் கண்டார். 2002ஆம் ஆண்டு 15 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த சாதனை சீனாவின் ஹூ யிஃபான் என்ற வீராங்கனையால் 2008ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது.

"தன்னம்பிக்கை இருந்ததாலேயே இத்தனை ஆண்டுகளாக என்னால் வெல்ல முடிந்தது. ஒரு வீராங்கனை எப்போதுமே தனது விளையாட்டு பயணத்தை முடித்துக்கொள்ள யோசிக்கக்கூடாது. திருமணம் மற்றும் தாய்மை என்பன வாழ்க்கையின் ஒரு பகுதியே. அது நமது வாழ்க்கையையே மாற்றக்கூடாது." என்றார் கொனேரு.

இந்த நிகழ்ச்சியில், காணொளிக்காட்சி மூலம் கலந்துகொண்ட பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவீ, வெற்றியாளரை அறிவித்தார். "பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது என்பது வெறும் விருது மட்டுமல்ல. இது எங்களின் திட்டத்தில் ஒரு அங்கமாக உள்ளது. ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் குரலும் எங்களின் செய்தியில் எதிரொலிக்க வேண்டும் என்றும், நாம் வாழும் உலகைப் பிரதிபலிக்கும் வகையில் இவை இருக்க வேண்டும் என்பதையும் விளக்குவதாகும்."

கடந்த ஆண்டு, பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது தொடங்கப்பட்டது. இந்தியாவின் சிறந்த வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையிலும், இந்தியாவில் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இந்த விருது விளக்குகிறது.

அஞ்சு பாபி ஜார்ஜ்
படக்குறிப்பு,

அஞ்சு பாபி ஜார்ஜ்

முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ், விளையாட்டுத்துறையில் அவரின் பங்களிப்பு மற்றும் பல இளம் வீரர் - வீராங்கனைகளை ஊக்குவித்ததற்காகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

இதுநாள் வரையில், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் இவரே.

இந்த விருது பெற்றதற்காக மகிழ்ச்சி தெரிவித்த அவர், தனக்கு உறுதுணையாக இருந்த தனது பெற்றோர், கணவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார், கடின உழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

"உலகில் உள்ள அனைத்து வீரர்-வீராங்கனைகளுக்கும் கூறிக்கொள்கிறேன், விளையாட்டில் சற்றே சரிவை சந்திப்பது, எந்த ஒரு வீரரையும் வலிமையடையவே செய்யும். இலக்கின் மீதிருந்து கவனத்தை மாற்றாதீர்கள். தினமும், ஒரு மேம்பட்ட மனிதராக உங்களின் வாழ்க்கையை தொடருங்கள்." என்றார்.

இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற அபினவ் பிந்தரா, வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தார். வளர்ந்து வரும் வீராங்கனை விருதை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.

வளர்ந்து வரும் வீராங்கனை விருது, மனு பாக்கருக்கு அளிக்கப்பட்டது. இப்பிரிவு, இந்த ஆண்டுதான் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

"என் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது போல உணர்கிறேன். இப்போது, மக்களுக்கு என்னுடைய கடின உழைப்பு தெரிந்துள்ளதுபோல உணர்கிறேன்." என்று காணொளிக்காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மனு பேசினார்.

மனு பாக்கர்
படக்குறிப்பு,

மனு பாக்கர்

19 வயதாகும் மனு பாக்கர், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டிற்கான பெடரேஷன் நடத்தும் உலகக்கோப்பை போட்டியில், 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இந்த பட்டத்தை வென்ற மிகவும் இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பிபிசியின் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு, காணொளிக்காட்சி மூலம் புது டெல்லியில் நடைபெற்றது. நான்குமுறை உலக சாம்பியன்ஷிப் வென்ற பாரா விளையாட்டு வீராங்கனையான பாரூல் பார்மர், இந்த நிகழ்ச்சியில் இணையதளம் மூலம் இணைந்தார்.

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணியான சந்தோஷ் யாதவும், இந்த நிகழ்ச்சியில் இணைந்தார்.

இந்த ஆண்டு விருதிற்கான ஐந்து போட்டியாளர்களும், கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டனர். துறை சார்ந்த வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களின் கலந்துரையாடலுக்குப் பின், இவர்கள் தேர்வாகியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி, ஒரு சிறப்பான 'ஸ்போர்ட்ஸ் ஹாக்கத்தான்' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள வீராங்கனைகள் குறித்த தகவல்களை, இந்திய மொழிகளில் உள்ள விக்கீப்பிடியா தளத்தில் சேர்ப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விக்கீப்பீடியாவில் தகவல் மிகக்குறைவாக அல்லது தகவல்களே இல்லாத வீராங்கனைகளின் பக்கங்கள் இதில் சேர்க்கப்பட்டன.

50 இந்திய வீராங்கனைகள் குறித்து 300 பக்கங்களை 12 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300 ஊடகவியல் மாணவர்கள் விக்கீபிடியாவில் உருவாக்கினர்.

இந்த ஆண்டு, 'சேஞ்மேக்கர்ஸ்' என்ற தலைப்பில், மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான ஐந்து வீராங்கனைகளின் கதைகளும் பகிரப்பட்டன. இதில், பாரா- பாட்மிட்டன் வீராங்கனை பாருல் பார்மர், ஹெப்டத்லான் வீராங்கனை ஸ்வப்னா பர்மன், பாரா- ஸ்கேட்டிங் வீராங்கனை பிரியங்கா தேவான், கோ - கோ வீராங்கனை சரிகா கேல் மற்றும் மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றிருந்தன.