இராகலையில் இன்று


 


(க.கிஷாந்தன்)

 

தேயிலைத் தோட்டங்கள் காடாகி விலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தேயிலைத் தோட்டங்களை துப்பரவு செய்து தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தில் இராகலை - மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (19.03.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மாக்குடுகலை தோட்டத்தில் கடந்த  20 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலை வளாகத்திலேயே இரு தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

இன்றுடன் 13 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதாகவும், தீர்வு கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் சூளுரைத்துள்ளனர். 

 

இது தொடர்பில் தொழிலாளர்கள் கூறியவை வருமாறு,

 

" மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன. சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

 

எனவே, காடாகவுள்ள தோட்டங்களை துப்பரவுசெய்து, தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு கோரியே போராட்டம் இடம்பெறுகின்றது.  எமக்கு தீர்வு அவசியம். அது கிடைக்கும்வரை போராடுவோம்." - என்றனர்.