லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை



 (க.கிஷாந்தன்)

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  மூலம் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று (25.04.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய லிந்துலை – அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியில் முதற்கட்டமாக சுமார் 6.5 கிலோ மீற்றர் தூரம் 404 மில்லியன் ரூபா செலவில் பாதையினை அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு” எனும் தொனிப்பொருளில், 100,00 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் காப்பட் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் லிந்துலை – டயகம வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் பங்கேற்பில் இன்றைய தினம் (25.04.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்படி முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.