நுவரெலியா,சுகாதார பணியாளர்கள்,,அடையாள பணி பகிஷ்கரிப்பு


 


(க.கிஷாந்தன்)

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி இன்று (9) புதன்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நான்கு மணித்தியாலயங்கள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையின் முற்றத்தில் முன்னெடுத்தனர்.

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணி பகீஷ்கரிப்பில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகளில் பொறித்து ஏந்தியவாரு இப்போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்தனர்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக தொழில்புரியும் சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், மேலதிக சேவை நேரத்திற்கான கொடுப்பனவை வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலுகைகளை தமக்கும் வழங்க வேண்டும் என மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இன்றுடன் நான்காவது முறையாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.