நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான,கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று


 


(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (09.06.2021) ஆரம்பமானது.  

நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் வைத்து ஆரம்பமான தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்ட முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்துக்கென 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏனைய 10 ஆயிரம் தடுப்பூசிகள் பொலிஸார், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (09.06.2021) நேரடி பயணம் மேற்கொண்டு கண்காணித்தார்.

இந்த கண்காணிப்பில் பிரஜாசக்தியின் பணிப்பாளரும், கொவிட் தடுப்பூசி செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.