வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி ஆர்பாட்டம்





 (க.கிஷாந்தன்)

 

வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று (18) பிற்பகல் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் தாம் வாழ்வாரத்தை இழந்து நிர்கதியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

 

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணம் கூட இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

 

இதனால் தமது பிள்ளைகள் உள்ளிட்டோம் ஒருவேளை உணவுக்காக கஸ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

இதுவரை தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட தமது தோட்ட பகுதிக்கு வருகைத்தந்து தம்மை விசாரிக்கவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

ஆகவே மேற்படி கோரிக்கைகளுக்கு மலையக அரசியல் தலைமைகள் உடனடி தீர்வை வழங்க வேண்டும் எனவும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இதேவேளை, ஜூன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று பிற்பகல் தெரிவித்தார்.

 

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என  இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.