ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் போராட்டம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கோவிட் தொற்று மற்றும் இடையூருக்கு மத்தியில் சேவை வழங்கும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட கொடுப்பனவையும் மேலும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து இன்று (11) காலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிந்தவூர் ஆதார வைத்தியசாலை  முன்றலில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கொவிட் காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் நிலையில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப் படுவதாகவும் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

அரச தாதியர் சங்கம், அரச சுகாதார ஊழியர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப் படுவதாகவும் தமது கோரிக்கைக்கு முறையான பதில்கள் வழங்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்த வேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த போராட்டத்தில் தொற்று நிலைமையின் கீழ் அவதானம் மற்றும் இடையூறுகள் மத்தியில் சேவைகள் வழங்கும் அனைத்து ஊழியர்களுக்காகவும் விசேட கொடுப்பனவை வழங்குதல் . பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்குதல் . அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை நாள் கொடுப்பனவு வழங்குதல் . கோவிட் -19 தடுப்பு செயற்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக சுகாதாரச் சேவை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தொழிற்ச் சங்க குழுவொன்று நியமித்தல் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு அவசியமாகும் போது அதற்கு சுகாதாரச் செயலாளரின் ஒத்துழைப்பினை வழங்குதல் .
 
வைத்தியசாலை கோவிட் குழுவிற்காக தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் தொழிற் சங்க பங்குப்பற்றுதலுடன் வைத்தியசாலை ஆலோசனை குழு மீண்டும் நடைமுறைப்படுத்தல், பதலீட்டு அமைய சுகாதார உழியர்களை நிரந்தரமாக்குதல், அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய்தல், வெற்றிடங்களை நிரப்புதல் விரைவாக மேற்கொள்ளல்,பதலீட்டு அமைய சுகாதார உழியர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் நாளாந்த சம்பளத்தினை செலுத்துதல்,தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக N95 முகக் கவசம் , பாதுகாப்பான உடை ஆகிய வசதிகளை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குதல், பொது நிர்வாக சுற்றறிக்கையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதன் படி மகப்பேறு சுகாதார ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குதல், அனைத்து ஊழியர்களுக்கும் செலுத்துகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவு , விடுமுறை நாள் கொடுப்பனவு , அழைப்பு கொடுப்பனவு வரையறைகளை நீக்குதல்,அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதியினை முறையாக மற்றும் இலவசமாக வழங்குதல் .
 
சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் -19 தொற்று ஏற்படும் போது சிகிச்சை வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான முறையான முறையொன்றினை தயாரித்தல், கடமைக்கு சமூகமளிப்பதற்கு விசேட இடையூறுகள் உள்ள ஊழியர்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் சுகாதார நிலையமொன்றில் கடமையாற்ற இடமளித்தல் . 

கடமையினை மேற்கொள்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக உணவு வழங்குதல் மற்றும் விதிக்கப்பட்டுள்ள நாட்களில் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உணவு வழங்குவதற்காக முறையான சலுகை செயற்திட்டமொன்றினை நிறுவுதல் . போன்ற பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.