இதுவரை 1,297 பேரை பலியெடுத்த ஹைட்டி நிலநடுக்கம்


 

ஹைட்டியில் நேற்றுமுன்தினம் (14) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297ஆக அதிகரித்துள்ளது. 

அந்நாட்டு நேரப்படி நேற்றுமுன்தினம் காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.2 மெக்னிடியூட்டாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்த நிலநடுக்கத்தினால் 5,700ற்கும் அதிகமானோர் காயமடைந்து, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஏராளமான வீடுகளும் நிர்மூலமாகியுள்ளன. 

நிலநடுக்கத்தினால் பாரியளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் Ariel Henry ஒரு மாதத்திற்கு அவசரகால நிலையினை பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.