இந்தியா தினமும் 2 விமானங்களை இயக்க அனுமதி.காபூலுக்கு



 காபூல்:


20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்.


அவ்வகையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் காபூல் விமான நிலையம் முன்பு குவிந்துள்ளனர். 



 

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்களை கணக்கெடுத்து அனுப்பி வருகிறார்கள்.


இந்நிலையில், காபூலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக தினமும் இரண்டு விமானங்களை இயக்க அமெரிக்க படைகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் குடிமக்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வெளியேற்றுவதற்காக தினமும் 25 விமானங்களை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.