அக்கரைப்பற்று 20 -21 பொது வீதி கொங்றீட் வீதியாகின்றது


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  நாட்டில் கொரோனா தொற்றினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அபிவிருத்தி திட்டங்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட அக்கரைப்பற்று
20 -21 பொது வீதி இரு தசாப்தங்களின் பின்னர் இரண்டரை கோடி ரூபா செலவில் இருபக்க வடிகானுடன் இணைந்த கொங்றீட் வீதியாக மாற்றம் பெற்று வருகின்றது.

அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் அதிமேதகு ஜனாதிபதியின் சௌபாக்கியா கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்
ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதி அமைக்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக குறித்த வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ஐ.எச்.எம்.வஹாப் மேற்கொண்ட பெருமுயற்சியின் பயனாகவே கடந்த பல வருட காலமாக சேறும் சகதியுமாக காணப்பட்ட வீதி இரு பக்க வடிகானுடனான கொங்றீட் வீதியாக அமைக்கப்பட்டு வருகின்றது.

அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ஐ.எச்.எம்.வஹாப் தலைமையில் இன்று இடம்பெற்ற வீதி அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினரும் அனைத்த பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் குறித்த வீதியினை அமைக்க பெருமுயற்சி எடுத்தவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.