கல்முனையில்,காலநிலை மாற்றத்தை முன்னிட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பின்னிரவிலும் இடம்பெறுகின்றன


 


(நூருல் ஹுதா உமர்)


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை பொதுச்சந்தை மற்றும் கல்முனை நகர்ப்பகுதியில்  எதிர்வரும் காலநிலை மாற்றத்தை முன்னிட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் வடிகான் துப்பரவு செய்யும் வேலைத்திட்டமும் கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.கே.அர்சத் காரியப்பரின் பணிப்புக்கமைய பிந்திய இரவு நேரம் வரை இடம்பெற்று வருகின்றது.

கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். ரக்கிப்பின் ஆலோசனைக்கமைய பொதுமுடக்க காலக்கட்டத்திலும் இடம் பெற்றுவரும் இந்த பணியானது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. கடந்த 05 நாட்களாக மாலை 02 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் வடிகான் துப்பரவு செய்யும் வேலைத்திட்டமும் இரவு 10 மணிவரை நடைபெறுவதாக வேலைத்தள மேற்பார்வையாளர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும் காலை வேளைகளில் ஊரின் மத்தியிலும் இரவு நேரங்களில் சந்தை கட்டிடம் அடங்களாக கல்முனை மத்தியிலும் இடம்பெறும் இந்த பணியின் போது வடிகான்களில் இருந்து அகற்றப்படும் மண்ணானது திண்மக்கழிவகற்றும் பிரதேச பாதைகளை சீரமைக்க பயன்படுத்தப்படுகிறது என்றார்.

மழைகாலம் வந்தால் 2 அடியளவில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் இந்த பிரதேசத்தில் இப்படியான பணியை அசாதாரண காலப்பகுதி என்று கூட பாராமல் முன்வந்து துப்பரவு செய்யும் கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவு ஊழியர்களுக்கும் திண்மக்கழிவகற்றும் ஊழியர்களுக்கும் இதுவரை எவ்வித கொரோனா பாதுகாப்பு அங்கிகளும் கல்முனை மாநகர சபையினால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.