பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி


 


நியூயார்க்:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார்.

“ஆப்கானிஸ்தான் பிரதேசம் பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் காக்க வேண்டும்.

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி

உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது. பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், பயங்கரவாதம் அவர்களுக்கே ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அச்சமின்றி நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என மோடி பேசினார்.