கொரோனா ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருந்துப்பொதி வழங்கி வைப்பு !


 


கொரோனா ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருந்துப்பொதி வழங்கி வைப்பு !


நூருல் ஹுதா உமர் 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்று நோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடியின் பணிப்புரைக்கமைய ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிகவின் வழிகாட்டலின் அடிப்படையிலும் கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துப்பொதி வழங்கும் நிகழ்வு நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம். நக்பர் தலைமையில் இன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம். நக்பர், நாங்கள் அறிமுகம் செய்துள்ள ஆயுர்வேத மருந்துப்பொதியில் ஐந்து நபர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான   சுவதாரணி, தாஸி சாதி தூள், சித்தராம வட்டி, தேசந்துங் கல்க, சுதர்சன தூள், ஆவி பிடிக்க உபயோகிக்கும் எண்ணெய், தொண்டையில் பூசும் எண்ணெய் என்பன  அடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற மக்கள் காட்டுவிலங்குகள் பறவைகளின் தொடர்புகளை குறைத்து கொள்வதுடன் தற்போதைய கொரோனா  காலகட்டத்தில் சுகாதார பழக்கவழக்கங்களை எந்த துறையினராக இருப்பினும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதுடன் தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக்கொள்வது அவசியம் என்றார்.