இரு படுதோல்விகளுக்கு பிறகு, மீண்டுவந்து ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் 2021 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரைஇறுதி வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருந்து சற்றே தப்பித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது; 211 ரன்களை துரத்திய அந்த அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
பெரிய வெற்றி என்பதால் நெகட்டிவில் இருந்த இந்திய அணியின் ரன்ரேட் பாசிட்டிவாக மாறியது.
ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி 211 ரன்களை குவித்தபோது, ஆப்கானிஸ்தானின் ரன்ரேட்டில் கடும் சேதம் ஏற்படுத்தவும், அதே சமயம் தமது ரன்ரேட்டை அதிரடியாய் உயர்த்திக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பு இருந்தது.
ஆனால், கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால், குறைந்தபட்சம் 20-25 ரன்களை ஆப்கானிஸ்தானை கூடுதலாக குவிக்கவிட்டதன் மூலம், இந்த போட்டியில் வென்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டது இந்திய அணி.
இந்திய அணி இந்த போட்டியில் வென்றதன் மூலம், நியூசிலாந்து அணியைத் தவிர வேறு எந்த அணிக்கும் அதிகபட்சமாக எட்டு புள்ளிகள் கிடைக்காது என்பதால், ஏற்கனவே 4 போட்டிகளில் வென்று எட்டு புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் இன்னும் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, குரூப் 2 பிரிவில் மற்ற அணிகளுக்கு அரைஇறுதி வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளது?
நியூசிலாந்தின் நிலை என்ன?
இந்திய அணி புதன்கிழமையன்று ஆப்கானிஸ்தானை சாய்த்த நிலையில், அதே தினம் நடந்த மற்றொரு போட்டியில், நியூசிலாந்து கடைசி கட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது.
நியூசிலாந்து
பட மூலாதாரம்,GETTY IMAGES
நியூசிலாந்து அணி தனது அடுத்த இரு போட்டிகளில் நமீபியா, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு போட்டிகளை வென்றாலே போதும். நியூசிலாந்து அணி எளிதில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இதில் ஒன்றில் தோற்றால் கூட ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
ஒருவேளை ஆப்கானிஸ்தானோடு தோல்வியடைந்து, நமீபியாவுடன் வென்றால், நியூசிலாந்து அணி ஆறு புள்ளிகளை பெறும். அப்போது ஆப்கானிஸ்தானும் ஆறு புள்ளிகளை பெற்றிருக்கும்;
இந்தியாவும் மீதமுள்ள இரு போட்டிகளை வெல்லும் பட்சத்தில், மூன்று அணிகளும் ஆறு புள்ளிகளை கொண்டிருக்கும். அப்போது நிகர ரன்ரேட் அரைஇறுதி வாய்ப்பை முடிவு செய்யும்.
ஒருவேளை நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வென்று, நமீபியாவுடன் தோல்வியடையும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெறாது. அப்போது இந்தியா ஒருவேளை ஆறு புள்ளிகளை பெற்றிருந்தால்; இந்தியா அல்லது நியூசிலாந்து அணிகளில் ஏதாவது ஒன்று ரன்ரேட் அடிப்படையில் அரை இறுதிக்குத் தகுதிபெறும்.
ஆப்கானிஸ்தான் வாய்ப்பு எப்படி?
இந்திய அணியுடன் தோல்வியடைந்தபோதிலும் ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது.
அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால் புள்ளிபட்டியலில் ஆறு புள்ளிகளை பெற்றுவிடும்.
அப்போது ஆறு புள்ளிகளை பெற்ற மற்ற அணிகளின் நிகர ரன்ரேட்டோடு ஒப்பிடப்பட்டு அரைஇறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும். ஏற்கனவே நல்ல ரன்ரேட் (+1.481) உள்ளது என்பதால் ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு இன்னமும் பிரகாசமாகவே உள்ளது. ஆனால் நியூஸிலாந்துடன் தோற்றால் தொடரை விட்டு
இந்தியா தகுதி பெறுமா?
தற்போதைய சூழலில் புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளோடு நான்காவது இடத்தில் இருக்கிறது இந்திய அணி. இனி ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த இரு அணிகளையும் வென்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை நினைத்துப்பார்க்க முடியும். ரன்ரேட்டில் மற்ற அணிகளை விட பின்தங்கி இருப்பதால் (+0.073) அபார வெற்றி தேவை.
ஒருவேளை இரு போட்டிகளில் வென்று, நல்ல ரன்ரேட் வைத்திருந்தாலும் கூட நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுகளை கவனிக்கவேண்டும்.
நியூசிலாந்து அணி இனி விளையாடவுள்ள இரு போட்டிகளில் ஒன்றிலாவது தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவின் அரை இறுதி கனவு முழுமையாக தகர்ந்துவிடவில்லை என்றாலும் கூட, ஏற்கனவே பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை விடவும் அரை இறுதி வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்பதே நிதர்சனம்.

Post a Comment
Post a Comment