கடைசிப் பந்தை ஆடுகின்றார், இம்ரான் கான்



 


பாகிஸ்தான் அரசியலமைப்பின் கீழ், 342 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மை பலம் அடிப்படையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த வகையில் பிரதமர் ஆக வேண்டுமானால், அந்த பதவிக்கான வேட்பாளருக்கு 172 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பிக்களின் வாக்குகள் தேவை.


ஆட்சி அமைத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமானாலும் , இதே எண்ணிக்கை பலம் பிரதமருக்கு இருக்க வேண்டும்.


எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்க, இம்ரான் கானுக்கு 172 வாக்குகள் தேவை. ஆனால், தனது சொந்தக் கட்சியான பி.டி.ஐ-ல் இருந்து பல உறுப்பினர்கள் விலகிச் சென்றது அவரை ஆழமான சிக்கலில் தள்ளியிருக்கிறது.


வாக்கெடுப்புக்கு பிறகு என்ன நடக்கும்?

இம்ரான் கான் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால்கூட தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2023இல் முடிவடையும் வரை தொடர்ந்து செயல்படலாம். அதன் பிறகு 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.


அதுவரை புதிய பிரதமராக பணியாற்றுபவரை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட எந்தக் கட்சியும் தமது தரப்பு வேட்பாளர்களை முன்னிறுத்தலாம். எவ்வாறாயினும், புதிய பிரதமர் 2023ஆம் ஆண்டு வரை காத்திருக்காமல் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த அழைப்பு விடுக்கலாம்.


ஒருவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சில அரசியலமைப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இம்ரான் கானுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

சொந்த கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் தனக்கு எதிரான தீர்மானத்தை ரகசியமாக ஆதரிக்கும் நிலையை தடுக்கும் நோக்குடன், வாக்கெடுப்பு நடத்தப்படும் நாளில், தனது சொந்த கட்சியான் PTI -இன் எம்.பிக்கள் யாரும் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என்று இம்ரான் கான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.



உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருப்பதால் அவர் வெற்றி பெற தமது ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. அதேசமயம், எதிர்கட்சிகளுக்கு தேவைப்படும் 172 வாக்குகளை அவை பெறாமல் இருக்க தேவையான உத்தியை அவர் கையாளலாம்.


இதற்கிடையே பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் இம்ரான் கான் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிராக திரும்பக் கூடிய அதிருப்தி எம்பிக்கள் மீது வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிடும்படி அந்த மனுவில் இம்ரான் கான் கோரியிருக்கிறார்.



பாகிஸ்தான் அரசியலில் பிரதமராக இருப்பவர்களுக்கு என ஒரு வரலாறு உண்டு. அது அந்த நாட்டில் இதுவரை எந்தப் பிரதமரும் ஐந்தாண்டுகள் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை.


கடந்த 50 ஆண்டுகளில் பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை. 1989இல் பெனாசீர் பூட்டோ, 2006இல் ஷெளகத் அஜீஸ் ஆகியோருக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதில் அவர்கள் வென்றுள்ளனர். இவர்களின் வரிசையில் தற்போது எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு சவாலை எதிர்கொள்ளும் மூன்றாவது பிரதமர் ஆகியிருக்கிறார் இம்ரான் கான்.