இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.
ரெட் சமாதி' நாவல் பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் ஆங்கிலத்தில் மொழிபெயக்கப்பட்டது. பரிசுத்தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும். ராஜ்கமல் பிரகாஷன் பதிப்பகத்தால் இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு டில்டட் ஆக்சிஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இவ்விருதுக்கான நடுவர்கள் குழுவால், "தனித்துவமான நாவல்" என இந்நாவல் வர்ணிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
50,000 பவுண்ட் பரிசுத்தொகை அடங்கியது சர்வதேச புக்கர் பரிசாகும். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும்.
"புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதனை வெல்வேன் என நினைக்கவில்லை," என கீதாஞ்சலி ஸ்ரீ தெரிவித்துள்ளார். "இது பெரிய அங்கீகாரம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பணிவாகவும் உணர்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்
மூன்று தசாப்தங்களாக எழுதிவரும் கீதாஞ்சலி ஸ்ரீ
கடந்த 3 தசாப்தங்களாக இலக்கிய துறையில் தீவிரமாக இயங்கிவருபவர் கீதாஞ்சலி ஸ்ரீ. அவரது முதல் புத்தகமான 'மாய்' (Mai), ஹமாரா ஷாஹர் அஸ் பராஸ் (Hamara Shahar Us Baras) புத்தகங்கள் 1990களில் வெளியாகின. அதன்பின்னர், 'திரோஹித்', 'காளி ஜகா' (khali jagah) நூல்களும் வெளியாகின. நாவல்கள் மட்டுமல்லால் பல்வேறு சிறுகதைகளையும் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதியுள்ளார். அவருடைய 'மாய்' புத்தகம் 'க்ராஸ்வார்ட்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அவருடைய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் அமெரிக்காவில் வசித்துவருகிறார். உபேந்திரநாத் அஷ்க்கின் 'கீர்த்தி தீவர்' நாவல் குறித்த ஆய்வுக்காக பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார். எழுத்தாளர்கள் உபேந்திரநாத் அஷ்க், கதீஜா மஸ்தூர், பீஷ்மா சாஹ்னி, உஷா பிரியம்வதா, கிருஷ்ணா சோப்தி ஆகியோரின் புத்தகங்களை இவர் மொழிபெயர்த்துள்ளார்


Post a Comment
Post a Comment