விமான நிலையத்தில் நள்ளிரவில் நடந்தது என்ன?




 

இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார்.
மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பிபிசியிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.

இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

'
இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இதனால் இன்று காலை இந்த முனையத்தில் பயணிகள் சிறப்புச் சலுகையுடன் பயண நடைமுறைகளை நிறைவேற்ற வாய்ப்பின்றி பிசினஸ் வகுப்பு பயணிகள், சாதாரண வகுப்பு பயணிகள் போல வரிசையில் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசினஸ் வகுப்பு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக இந்த 'சில்க் ரூட் பேசஞ்சர் கிளியரன்ஸ் டெர்மினல்' என்ற பெயரிலான தனி பாதை மற்றும் விரைவு விமான பயண நடைமுறையை நிறைவேற்றும் வசதி செயல்பாட்டில் உள்ளது.