நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி சில வாரங்களுக்கு முன்னர் திடீர் சுகயீனமுற்று கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட புவனேஸ்வரி, அப்பதவியின் ஊடாக மிகவும் பொறுப்புணர்வுடன் தான் சார்ந்த சமூகத்திற்கும் பாண்டிருப்பு பிரதேசத்திற்கும் அளப்பரிய சேவையாற்றியிருந்தார்.
பாண்டிருப்பு பிரதேசத்தில் பல வீதிகளை புனரமைப்பு செய்திருப்பதுடன் அங்கு முதன் முறையாக காபர்ட் வீதி அபிவிருத்தித் திட்டத்தையும் புவனேஸ்வரியே மேற்கொண்டிருந்தார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் பல கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பாண்டிருப்பு பிரதேசத்தில் காபர்ட் வீதி உட்பட மைதானம், மையவாடி போன்றவற்றை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்திருந்தார். சமூக சேவையாற்றுவதில் எப்போதுமே அவர் கூடிய கரிசனை காட்டி வந்துள்ளார்.
இவரது மரணச்செய்தி அறிந்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள் எனப்பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment