(வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை பிராந்தியத்திலுள்ள எட்டு முன்னணி தேசிய பாடசாலைகளிடையே இடம்பெற்ற "அறிவுச் சுடர்" போட்டியில் கிழக்கில் புகழ்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சரும், வர்த்தக வாணிப அமைச்சருமான மறைந்த ஏ.ஆர்.மன்சூர் ஞாபகார்த்தமாக குறித்த போட்டி கடந்த மூன்று மாதங்களாக சாய்ந்தமருது அல் ஹிலால் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று வந்தது.
மறைந்த முன்னாள் அமைச்சர் மன்சூரின் புதல்வி மர்யம் நலிமுடீன் (சட்டத்தரணி) அவுஸ்திரேலியா மற்றும் அவரது கணவர் நலிமுடீன் சிஹாப்தீன் ( வைத்தியர்) அறம் ஊடக வலையமைப்பு, மற்றும் அறம் அறக்கட்டளை அமைப்பு இம் மாபெரும் அறிவுச் சுடர் போட்டியை ஏற்பாடு செய்தனர்.
இறுதிச் சுற்றில் கார்மேல் பற்றிமா கல்லூரி வெற்றி வாகை சூடியது. 50ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் கேடயமும் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
மஃமூத் பெண்கள் பாடசாலை 2ம் இடம் பெற்று 40ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது. உவெஸ்லி உயர் தர பாடசாலை 3ம் இடத்தினைப் பெற்று 30ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டது .
பரிசளிப்பு விழா நேற்று முன்தினம்(21) சனிக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பரிசளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் அமைச்சர் மன்சூரின் புதல்வி மர்யம் நலிமுடீன் (சட்டத்தரணி) அவுஸ்திரேலியா மற்றும் அவரது கணவர் நலிமுடீன் சிஹாப்தீன் ( வைத்தியர்) புத்திரன் கல்முனை மாநகர பிரதி மேயர் றஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முதலிடம் பெற்றகல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி சார்பில் கல்லூரி அதிபர் அருட்சகோ சந்தியாகு செபமாலை கலந்து சிறப்பித்தார்.


Post a Comment
Post a Comment