அதி சொகுசு கார் பொத்துவில் பகுதியில் மீட்பு


 


பாறுக் ஷிஹான்


பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக   சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன  கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த    சந்தேக நபர் பின்னர் இந்தியாவிற்கு தப்பி செல்லும் வேளை  விமான நிலையத்தில் வைத்து   கைதானார்.அச்சந்தேக  வழங்கிய தகவல் ஒன்றிற்கமைய பொத்துவில் பகுதியில்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில்    கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் இன்று குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் போது   கைதான   சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது 3 ஆவது மனைவி என கூறப்படும் பெண்ணின்  வீட்டில் இருந்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த  பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக  சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பனவற்றை பொலிஸ் மோப்பநாய் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பிற்கு விசேட அதிரடிப்படையின் உதவியும் பெறப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக  சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மீட்கப்பட்ட கார் பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகாக்கள் பயணித்த நிலையில் வேறு ஒரு குழுவினரால்  துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு தப்பி சென்று பொத்துவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அத்துடன்  வெளிமாவட்டத்தில் ஏதாவது குற்றச்செயலுக்கு பாவிக்கப்பட்டு குறித்த கார்  மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் மூவரும்  வெள்ளிக்கிழமை (23) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து  எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்களில் ஏற்கனவே சம்பவ தினமன்று 2 பேரும்  மற்றுமொருவர் விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டிருந்தனர்.மற்றுமொரு சந்தேக நபர் தொடர்ந்தும் தலைமைமறைவாகவே இருந்து வருகின்றார்.அச்சந்தேக நபரை தொடர்ச்சியாக பொலிஸார் தேடி வருகின்றார்கள்.இச்சந்தேக நபர் தனியார் காப்புறுதி  அலுவலகம் ஒன்றில் பணியாற்றுவதாக கூறி வாகனங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளதுடன் இவ்வாறான போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில்   நீதிமன்ற அனுமதியுடன்    கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையில்    கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்டுள்ள காரின் பெறுமதி சுமார் 1 அரைக்கோடி ரூபா பெறுமதி மதிக்கத்தக்கதாகவும்  கார் தற்போது கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.அந்த கார் சம காலத்தில் பல நபர்களின் பெயரில் பதியப்பட்டுள்ள விடயம்  விசாரணையில் தெரிய வந்தது. மேலும் குறித்த கார்   வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா என்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இதே வேளை அடையாளம் காணப்பட்ட காரின் உரிமையாளரை கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர். 
இதேவேளை  காரின் கதவுகளை திறந்து பொலிசார் சோதனையிட்டதில்  சில சான்று பொருட்களை கைப்பற்றியுள்ளனர். எனினும்  கார் இன்னும் முழுமையாக சோதனையிடப்பட்டு முடியவில்லை.இது தொடர்பில்  கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப்  தலைமையில்  பொலிஸ் சார்ஜன்ட்களான எம்.எம்.எம். அன்வர்  (63037) பொலிஸ் கன்ஸ்டபிள்களான வை.நவராஜ் (8475) எம்.இஷாக்(76433) ராஜபக்ஸ ( 86765) எஸ்.தர்சீகன்(99058)ஆர்.ஹேமானந்த(99059)  ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



சம்பவத்தின் பின்னணி 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு இரு வாகனங்கள் ஒரு சந்தேக நபர் 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன் 36 வயது சந்தேக நபரையும் கடந்த வருடம் டிசம்பர்  வியாழக்கிழமை(22) நள்ளிரவு கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்திருந்தனர்.

இவ்வாறு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் ஒரு வேன் மற்றும் கார் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதன் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.