கொங்கிரிட் வீதிக்கு மேல் கார்ப்பட் வீதியா?



 (காரைதீவு சகா)


 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த விபுலானந்த வீதி இன்று அரைகுறையாக காணப்படுகிறது. ஏலவே கொங்கிறீட் வீதியாக இருந்த இவ் வீதிக்கு மேலாக இப்போது அரைகுறையாக கார்ப்பட் வீதி போடப்பட்டுள்ளது. அதனை சீர் செய்து தர வேண்டும் .

இவ்வாறு காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எஸ் எம் எம். முஷரப் தலைமையில் மேற்படி கூட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்ற போதே பொதுமக்கள் சார்பில்  ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

 அங்கு மேலும் தெரிவிக்கையில்..
 கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களிடமோ பிரதேச செயலாளரிடமோ அல்லது தவிசாளரிடமோ எந்த சம்மதமும் ஒப்புதலும்  விருப்பம் பெறப்படாமல் தன்னிச்சையாக இரண்டடி உயரத்துக்கு இந்த கார்ப்பெட் வீதி  கொங்கிறீட் வீதிக்கு மேலால் போடப்பட்டது.

 ஆனால், வீதியின் இரு பக்கமும் எத்தகைய வடிகானும் இல்லாமல் அரைகுறையாக போடப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்களும் பாதசாரிகளும் வாகனமோட்டிகளும் பலத்த அசௌகரியத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.
எனவே இதனை சீர்செய்து மக்கள் பாவனைக்கு விடவேண்டும்.
 இல்லாவிட்டால் இதை கணக்காய்வுப்பிரிவுக்கு சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
மேலும் ,காரைதீவை ஊடறுக்கும் கரைச்சை ஏரிக்கு மேல் போடப்பட்ட பாலங்கள் உடைந்து விழும்தறுவாயிலுள்ளது. பெரும் அனர்த்தம் நிகழமுன்பு அப்பாலங்கள் புனரமைக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அவற்றை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் முஷரப், சபையிலிருந்த  வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரை வினவி விளக்கம் கேட்டார். இதனை சீர் செய்து கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.