வீடொன்றின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ள நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு





 (வி.சுகிர்தகுமார்   0777113659)

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரதேசத்தில் வீடொன்றின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ள நிலையில் உள்ளிருந்து 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்க்கப்;பட்டுள்ளார்.
குறித்த வீடானது பின் பகுதி முற்றாக கல் வீடாக அமைந்துள்ளதுடன் முன்பகுதியின் கூரைப்பகுதி கிடுகினால் வேயப்பட்டிருந்தது.
வீட்டின் முன்பகுதியே தீக்கிரையாகியுள்ளதுடன் தீக்கிரையான பகுதியிலேயே சடலம் எரிந்த நிலையில் காணப்பட்டது.
உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (09) இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என அறியமுடிவதுடன் சம்பவம் நடைபெற்றபோது மனைவி பிள்ளைகள் அனைவரும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணையினை ஆரம்பித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக உயர் அதிகாரிகளுக்கும் விசேட தடயவியல் பொலிசாருக்கும் அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் தீடிர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டபின்னர் பிரேத உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக சடலத்தை கொண்டு செல்ல உத்தரவிட்டார்.