ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு



 



பாறுக் ஷிஹான்


ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடுவதாக இன்று சம்மாந்துறை  பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அப்பகுதியில் சந்தேக த்திற்கிடமாக நடமாடிய இரு சந்தேக நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த  கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருள்  மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன்  இச்சோதனை நடவடிக்கையில்  கைதான சந்தேக நபர்கள் சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும்  கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயது  சந்தேக நபர்களாவர்.

இதன்போது  கைது செய்யப்பட்ட  சந்தேக நபரிடம்  2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட  கையடக்க தொலைபேசி  பணம்  என்பன மீட்கப்பட்டதுடன்  மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும்  மீட்கப்பட்டன.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டுதலில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் தலைமையிலான குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டதடன்  சந்தேக நபர்கள்  தொடர்பில்  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.