வீதிப்போக்குவரத்து சட்டவிதிமுறைகள் மற்றும் விபத்துக்களை தடுத்தல்





 .சுகிர்தகுமார்          


வீதிப்போக்குவரத்து சட்டவிதிமுறைகள் மற்றும் விபத்துக்களை தடுத்தல் தொடர்பில் அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கீழ் வரும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை தெளிவூட்டும் கருத்தரங்கு  (15)ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்க ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற தெளிவூட்டல் கருத்தரங்கில் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண கலந்து கொண்டு வீதிப்போக்குவரத்து உள்ளிட்ட சட்டவிதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டினார்.
அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.
இதனை தடுப்பதற்காக அரச திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
தலைக்கவசம் இன்றி பயணம் செய்தலை தடுத்தல் மோட்டார் சைக்கிளின் பின்புறமாக இருப்பவர்கள் ஒரு பக்கமாக அமர்ந்து செல்வதற்கு சட்ட நடவடிக்கை எடுத்தல் வீதிகளில் போக்குவரத்து தடையாகவுள்ளவற்றை அகற்றல் வீதிகளின் நெல் உலர்த்துவதை தடை செய்தல் நடை பாதையில் வியாபாரம் செய்வதை தடுத்தல் வீதிகளில் வேகக்கட்டுப்பாட்டை குறிக்கும் பதாதைகள் நிறுவுதல் சந்தைப்பகுதியில் ஒற்றை நாள் இரட்டைநாள் வாகன தரிப்பிட நடைமுறையினை பின்பற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாசா அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் றாசிக் ஆலையடிவேம்பு சிவில் பாதுகாப்பு குழு தலைவர் அசோகா ஆறுமுகம் மற்றும் அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் பாணமை நிந்தவூர் இறக்காமம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் போக்குவரத்து பொலிசார் என பலர் பங்கேற்றனர்