வளைகுடாவில் சமீபத்திய நிலவரம் என்ன?கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான்



 இரான் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தாம் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் அமீருடன் பேசியதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.


" எரிசக்தி மற்றும் நீர் விநியோக நிலையங்கள் போன்ற சிவிலியன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது நமது பொதுவான நலன்களுக்கு உகந்தது.


பொதுமக்கள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளின் பாதுகாப்பும், அதே போல் எரிசக்தி விநியோகமும் ராணுவ மோதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.


வளைகுடா நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்

ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்புச் செய்தியாளர், தோஹா, கத்தார்


ராஸ் லஃபான் கத்தாரின் எரிவாயு உள்கட்டமைப்பின் மணிமகுடமாகத் திகழ்கிறது, எனவே இயல்பாகவே அந்நாட்டு அரசாங்கம் மிகுந்த கோபத்தில் உள்ளது.


சுமார் 18 நாட்களுக்கு முன்பு போர் தொடங்கும் வரை, கத்தாருக்கும் அதன் வளைகுடா அண்டை நாடான இஸ்லாமிய குடியரசுக்கும் (இரான்) இடையிலான உறவுகள் பொதுவாக நல்லுறவாகவே இருந்தன.


இரு நாடுகளும் சவுத் பார்ஸ் எரிவாயு வயலைப் பகிர்ந்துகொள்கின்றன, இது இந்த சிறிய வளைகுடா நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார செழிப்பைக் கொண்டு வந்துள்ளது.


கத்தார் அமைச்சர்கள் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளனர் மற்றும் போரை எதிர்த்த நாடுகளில் கத்தாரும் ஒன்றாக இருந்துள்ளது.


இரான் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அரபு வளைகுடா நாடுகளுக்கும் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.


வளர்ந்து வரும் மோதல்

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம்,EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு,இரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் மரணத்தை புதன்கிழமை இரான் அரசு உறுதிப்படுத்தியது (கோப்புப் படம்).

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை அன்று தெரிவித்தார். முன்னதாக, பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டிருந்தார்.


இரானிய மூத்த அதிகாரிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்மாயில் கதிப்பின் கொலையை ஒரு "கோழைத்தனமான கொலை" என்று இரானிய அதிபர் பெசெஷ்கியன் வர்ணித்துள்ளார், அதே நேரத்தில் நாட்டின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பழிவாங்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.


ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, மொஜ்தபா காமனெயி ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், "சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு" என்று கூறியுள்ளார்.


போரின் ஆரம்பகட்டத் தாக்குதல்களில் தனது தந்தை அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா காமனெயி, இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.


கோம் நகரில் உள்ள ஒரு மதத் தலத்தில் லரிஜானி அடக்கம் செய்யப்படுவார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


"எரிவாயு வயல் முழுவதையும் தகர்த்துவிடுவோம்" - இரானை எச்சரித்த அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் பட மூலாதாரம்,EPA/ Shutterstock

புதன்கிழமை இரவு இரானின் சவுத் பராஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.


அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக இரான் கத்தாரின் ராஸ் லஃபான் எனும் தொழில் துறை பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அப்பகுதியில் தான் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.


டிரம்ப் தன்னுடைய பதிவில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து "அமெரிக்காவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது" என்றும் இரான் மீண்டும் கத்தாரை தாக்கினால் நிலைமை தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.


"மத்திய கிழக்கில் நிகழ்ந்தவற்றின் மீதான கோபத்தினால்," இஸ்ரேல் "வன்முறையுடன் தாக்கியது" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


"இந்த குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை; மேலும், கத்தார் நாடு இத்தாக்குதலில் எந்த வகையிலும், எவ்வித வடிவிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை — இத்தாக்குதல் நிகழப்போகிறது என்பது பற்றிய எவ்விதத் தகவலும் அந்நாட்டுக்குத் தெரிந்திருக்கவும் இல்லை."


ஆனால் கத்தாரின் ராஸ் லஃபான் மீதான அதன் பதிலடித் தாக்குதல்கள் "நியாயமற்ற முறையிலும் அநீதியாகவும்" மேற்கொள்ளப்பட்டன என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



"இரான் விவேகமற்ற முறையில் வேறொரு நிரபராதி நாட்டின் மீது (கத்தார்) தாக்குதல் நடத்தத் தீர்மானிக்காத வரையில்," இஸ்ரேல் இரானின் 'சவுத் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், "இரான் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத அளவிலான வலிமையுடனும் ஆற்றலுடனும், சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா மிகக் கடுமையாகத் தகர்த்துவிடும்" என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.


இரானுக்கான "நீண்டகால விளைவுகள்" காரணமாக, "இந்த அளவிலான வன்முறை மற்றும் அழிவை" அங்கீகரிக்க தான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ள அவர், "ஆனால், கத்தாரின் எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்கமாட்டேன்." என்றார்.