நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தின நிகழ்வு இன்று கல்முனை தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசாங்க ஊழியர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய எஸ். லோகநாதன், நாட்டின் பொருளாதார சிக்கல்களின் பாரத்தை அரசாங்க ஊழியர்கள் மட்டுமே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஊழியர்களின் சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவு ஏற்றத்திற்கேற்ப திருத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், அரசாங்க சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பதவி உயர்வு தாமதங்கள், சேவை அமைப்பு குறைபாடுகள் மற்றும் பணிச்சுமை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியவை எனக் கூறப்பட்டது. “அரசாங்க ஊழியர்கள் நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருப்பினும், அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள், சமச்சீர் சம்பள கட்டமைப்பு, வேலை பாதுகாப்பு மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவற்றை உறுதி செய்ய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், எதிர்காலத்தில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசாங்கத்துடன் கலந்துரையாடலுக்கு தயாராக இருப்பதுடன், தேவையானால் போராட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயக்கம் இல்லை என சங்கம் எச்சரித்துள்ளது.
மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, அரசாங்க ஊழியர்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. பேராளர்கள் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் பழைய நிர்வாகமே இயங்க சபை அனுமதி வழங்கியது


Post a Comment
Post a Comment