இலங்கை தென்கிழக்குப் பல்கலையின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா




 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 2026 ஜூலை 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர் மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய 3,398 பட்டதாரிகளுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா, உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலும், வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா, PC முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொள்கிறார்.

பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்படுவதுடன், மத்திய மாகாண ஆளுநரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் சரத் அபேயகோன் பட்டமளிப்பு உரையை ஆற்றவுள்ளார்.

ஜூலை 25 ஆம் திகதி நடைபெறும் முதல் நாளில், காலை முதலாவது அமர்வில் பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்) மற்றும் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும். தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகளில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

ஜூலை 26ஆம் திகதி, பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கான நான்காவது அமர்வு நடைபெறவுள்ளது. பின்னர் ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் கலை மற்றும் கலாசார பீட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

இறுதி நாளான ஜூலை 27ஆம் திகதி, முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகளுக்காக ஏழாவது மற்றும் எட்டாவது அமர்வுகள் நடைபெறவுள்ளன. ஒன்பதாவது மற்றும் இறுதி அமர்வில் கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மொத்தமாக 3,398 பட்டதாரிகள் இவ்வாண்டு பட்டம் பெறுகின்றனர். இதில் பொறியியல், தொழில்நுட்பவியல், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக  விஞ்ஞானம், கலை மற்றும் கலாசாரம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களும் அடங்குகின்றனர். இது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சியையும் உயர்கல்வித் துறைக்கான அதன் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் முக்கியமான கல்வி நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பட்டமளிப்பு ஆடை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பட்டதாரிகள் தங்களுக்கான பட்டமளிப்பு அங்கி (Convocation Cloak), மாலை, அனுமதிச்சீட்டு மற்றும் தொடர்புடைய பொருட்களை ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தங்களது பீடங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அத்துடன், பட்டமளிப்பு அங்கி மற்றும் மாலையைப் பெற்றுக்கொள்ளும் போது, மாணவர்கள் தங்களது மாணவர் பதிவேடு அல்லது மாணவர் அடையாள அட்டையுடன், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட அறிவிப்புப் படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் அறிவிப்புப் படிவம் இல்லாமல் பட்டமளிப்பு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அறிவித்துள்ளார்.