தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 9 ஆண்களும் அடங்குவதாக அந்நாட்டு பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோர விபத்தில் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து தாய்லாந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலத்தில் தாய்லாந்தில் நிகழ்ந்த மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய தீ விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, விபத்து நேர்ந்த களியாட்ட விடுதியில் அவசர காலங்களில் வெளியேறுவதற்கான 'அவசரகால கதவுகள்' எதுவும் இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தீப்பற்றிய போது மக்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கியதே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதத்திற்கு முதன்மைக் காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்


Post a Comment
Post a Comment