கல்முனையில் ஆரம்பமாகிறது "FIT FOR LIFE CRICKET FIESTA 2026" கிரிக்கெட் சுற்றுப்போட்டி!



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள "FIT FOR LIFE CRICKET FIESTA 2026" பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி, நாளை (26) ஞாயிற்றுக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இச்சுற்றுப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான உத்தியோகபூர்வ மேலங்கி (Jersey) அறிமுக நிகழ்வும் இன்று (25) சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய பிரிவுத் தலைவர்கள் மற்றும் பிராந்தியத்திலுள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, போட்டியில் களமிறங்கும் அணிகளுக்கான பிரத்தியேக மேலங்கிகள் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், பிராந்திய பணிப்பாளர் அவர்களினால் அணித் தலைவர்களிடம் அவை கையளிக்கப்பட்டன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றா நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தொடர்ச்சியாகப் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்தி, அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இச்சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.