ஈராக்கின் பாலைவனப் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட கட்டார் நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை ..
கத்தார் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட 26 பேர் அடங்கிய குழுவினரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு குழுவினர் ஈராக் அரசின் அனுமதியுடன் எல்லைப்பகுதி பாலைவனத்தில் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேட்டையின் சுவாரசியத்தில் இருந்த அரச குடும்பத்தினர் பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் இருந்து விலகிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, குறித்த பிரதேசத்துக்கு வந்த 100க்கும் அதிகமான ஆயுததாரிகள் அவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து வந்த ஈராக் பொலிசார் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதியின் சுற்று வட்டாரத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தி சென்றவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்ற போதும் கடத்தல்காரர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதரவு குழுக்களாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களுடன் 2 ஈராக் பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர் ஆனால் அவர்களை பாதி வழியில் திருப்பி அனுப்பியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் முன்னர் ஈராக் பகுதியில் வைத்து 18 துருக்கி நாட்டினரை கடத்திச் சென்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு கத்தார் அரசு நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஈராக் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், இதுவரையில் அவர்கள் குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

