புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நோர்வேயின் அரசியல் அமைப்பு விவகார நிபுணர் கெவன் வொலன் இதற்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டிருப்பதுடன், அது தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களிடம் சர்வசன கருத்துக் கணிப்பொன்றும் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்த வேண்டுகோள் ஒன்றை நோர்வேயின் நிபுணர் கெவன் வொலன் இடமும் முன்வைக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் வடக்கின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கும்படியும், அதிகாரப் பரவலாக்கலின்போது கையளிக்கப்படும் அதிகாரத்தின் கீழ் பொலிஸ் அதிகாரத்தையும் உள்ளடக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

