எல்லை நிர்ணயத்தின் போது மக்களின் எதிர்பார்ப்புக்களே தேவை; அரசியல்வாதிகளின் வெற்றிகள் அல்ல




எல்லை நிர்ணயத்தின் போது மக்களின் எதிர்பார்ப்புக்களே தேவை; அரசியல்வாதிகளின் வெற்றிகள் அல்ல

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்காலத்தில் உடனடியாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினதும் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 


எல்லை நிர்ணயத்தின் போது பிரதிபலிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் அல்ல என்றும் மாறாக மக்களின் பொதுவான எதிர்பார்ப்புக்களே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது பெண்கள் போட்டியிடுவதை கட்டாயப்படுத்த எதிர்பார்த்திருப்பதனால் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பிலான சர்வகட்சி கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பிலான சர்வகட்சி கூட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறினார்.

அதன்படி பத்தரமுல்லையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் 64 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

இந்த திட்டத்தின் வெற்றிக்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு தேவை எனக் கூறினார்.