இலங்கையில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா கவலை



இலங்கையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில கவலைகள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.

அங்கு தொடர்ந்தும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்களும் துன்புறுத்தல்களை ஏதிர்கொள்ள நேரிடுகிறது எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
காரணங்கள் இன்றி ஆட்கள் தடுத்துவைக்கப்படுவது, பாலியல் பலாத்காரம், பாலியல் சார்ந்த வன்முறைகள் ஆகியவையும் இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால், அங்கு நெரிசல் மிகுந்து காணப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது
உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்பவர்களின் மனித உரிமைகள் புறந்தள்ளப்படுவது பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது எனக் கூறும் அந்த அறிக்கை, பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்முறையும் கவலையளிக்கின்றன எனவும் கூறுகிறது.
தொழிலாளர் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள், சிறார் தொழிலாளர் ஆகிய பிரச்சினைகளும் அங்கு உள்ளன என அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.