-ஜே.ஏ.ஜோர்ஜ்-
மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்களில் அதன் செல்வாக்கு எனும் தொனிபொருளில், இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2016, எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (25) கொழும்பிலுள்ள இராணுவ மின்சாரம் மற்றும் பொறியியற் பிரிவு முகாமில் நடைபெற்றது. இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா கலந்துக்கொண்டு விளக்கமளித்தார்.
பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் உருவாகி வரும் பிரச்சினைகளை ஆழமாக அடையாளம் கண்டு அவை தொடர்பாக ஆராயும் பொருட்டு இலங்கை இராணுவத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்களது பங்குபற்றுதலுடன்; 2011ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் முதல் இந்தப் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகின்றது. இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கமைய 2016ஆம் ஆண்டு தொடக்கம் 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' என்ற அடிப்படையில் இம்மாநாடு நடத்தப்படவுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 71 நாடுகளைச் சேர்ந்த 125 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 800 பேர்; பங்குபற்றவுள்ளனர் 2015ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட புத்திஜீவிகள் கலந்துக்கொண்டிருந்தனர். மென்வலு மற்றும் அதன் பல்வேறு செல்வாக்கு, மென்வலு அமைதியை கட்டியெழுப்புதல், ஆயுதப் படை மற்றும் அதன் செல்வாக்கு, மென்வலு மற்றும் உலகளாவிய விடயங்கள் என்ற அடிப்படையில் உப தலைப்புக்களில் ஒன்பது அமர்வுகளாக இம்மாநாடு இடம்பெறவுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, அங்குரார்ப்பன அமர்வின் போது பிரதான உரையையும், இராணுவத் தளபதி அறிமுக உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

