#கொழும்பு: போக்குவரத்து நெரிசலால் 39 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்



கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2015 ஆம் ஆண்டு 39 ஆயிரத்து 700 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து விசேட ஆய்வொன்றை மேற்கொண்ட பேராசிரியர் அமல் குமாரகே, வீதிகளை அகலப்படுத்துவது அல்லது அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதால், அது வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளார்.
வீதிகளை அகலப்படுத்தி தீர்வுகாண முயற்சித்த சீனா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் பல கடும் நெருக்கடிகளை சந்தித்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக பொது பயணிகள் போக்குவரத்து சேவையை திட்டமிட்ட வகையில் வலுப்படுத்திய சிங்கப்பூர் போன்ற நாடுகள் மிகவும் வெற்றிகரமாக பிரச்சினைக்கு தீர்வு கண்டு உலகத்திற்கு முன்னுதாரணத்தை காட்டியுள்ளன.
மேல் மாகாணத்தில் மேலும் 10 வீத வாகனங்கள் தனியார் போக்குவரத்தில் இணைந்து கொண்டால், வாகனங்களின் ஓட்ட வேகம் மணிக்கு 6 கிலோ மீற்றர் வரை குறையும் எனவும் அமல் குமாரகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் காணப்படும் இந்த பாரதூரமான பிரச்சினைக்கு 90 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைத்த போதிலும் எந்த அரசாங்கமும் இது குறித்து குறைந்த பட்ச கவனத்தையும் செலுத்தவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.