#சம்மாந்துறை:பருப்புக் கறியில் பல்லி



-எம்.எஸ்.எம். ஹனீபா-
 அம்பாறை, சம்மாந்துறை பகுதியிலுள்ள உணவகமொன்றில் பருப்புக்கறியில், இறந்த பல்லியொன்று காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட உணவத்தின் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு,  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றுத் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வீதி திருத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர்களுக்கென வழங்கப்பட்ட உணவுப் பொதியிலிருந்த பருப்புக்கறிக்குள் பல்லி இருந்துள்ளது. 
அதனை, உட்கொண்டவர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவ்விடயம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சகல உணவுப் பண்டங்களும் கைப்பற்றப்பட்டிருந்ததோடு உணவகம் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கெதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மேற்படி உணவகத்தில் காணப்பட்ட உணவுகளை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் படி சுகாதார வைத்தியதிகாரிக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.