ஜனாதிபதி தலைமையில் வடக்கில் 454 ஏக்கர் காணி விடுவிப்பு



யாழ். கீரிமலை பகுதியில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வீடுகள் கையளிக்கப்பட்டன.
இந்த வீடுகளை கையளிக்கும் வைபவம் கீரிமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மீள்குடியேற்ற அமைச்சின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 90 மில்லியன் ரூபா செலவில், இராணுவத்தினரின் உதவியுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ். காங்கேசன்துறை, மற்றும் தையிட்டி பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 454 ஏக்கர் காணிகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை யாழ். மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதி கையளித்ததாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானசோதி தெரிவித்தார்.
இதன் பிரகாரம், காங்கேசன்துறை தெற்கு, மேற்கு, மத்தி மற்றும் தையிட்டு தெற்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள காணிகள் உத்தியோகபூர்வமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.