மது போதையில்  'யெஸ் யுவ ஹொனர்' சொன்னவருக்கு விளக்கமறியல்



-செல்வநாயகம் கபிலன்-
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வாய் புசத்தி 'யெஸ் யுவ ஹொனர்' என்று சொல்லிய சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (27) உத்தரவிட்டார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றில், 40 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்காக மேற்படி நபர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
பார்வையாளர் அரங்கில் உட்கார்ந்திருந்த நபர், பிறிதொரு வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அதிக சத்தமாக 'யெஸ் யுவ ஹொனேர்' என கத்தியுள்ளார். இதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், குறித்த நபரை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
தொடர்ந்து, மேற்படி நபரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னால் முற்படுத்திய போது, சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிவான், அந்நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், மதுவெறுப்பு சிகிச்சைக்கு உட்படுத்த கட்டளை பிறப்பித்தார்.