விசாரணைகள் தோல்வியடைந்தால் ஜனாதிபதியே பொறுப்பினை ஏற்க வேண்டும்!



லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டுமென சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அந்த அமைப்பின் அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து காரணமாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும் அதிகாரி தமது பொறுப்புக்களை செய்யத் தவறினால் அந்தப் பொறுப்பினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தப் பதவி வெற்றிடமாக காணப்படுவது எமக்கு பிரச்சினையாக அமைந்துள்ளது.
நீதியான சமூகத்தை உருவாக்க லஞ்ச ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.லஞ்ச ஊழல் மோசடிகள் ஒர் வர்த்தகமாக நடைபெறுகின்றது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அவ்வாறான பின்னணியில் அரசாங்கத்தினால் நீதியான சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது.
ஜனாதிபதியின் கருத்தினால் பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்.எனவே அதனை விடவும் திறமையான தகுதியான ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.
புதிதாக நியமிக்கப்படும் அதிகாரி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிரான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளாவிட்டால் அந்த நியமனத்தில் பயனில்லை.
இந்த நியமனம் பற்றி நாம் மட்டும் பார்க்கவில்லை, வெளிநாடுகள் இராஜதந்திரகள் அனைவரும் கண்காணித்து வருகின்றனர்.
மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் இந்தப் பதவிக்காக நியமிக்கப்பட வேண்டியது அவசியமானது என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.