கடந்த வாரம் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான, என்.டி.டிவிக்கு, மத்திய அரசு வரும் புதன்கிழமையன்று விதித்திருந்த 24 மணி நேர ஒளிப்பரப்பு தடை உத்தரவை மத்திய அரசே இடை நிறுத்திவைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து என்.டி.டிவி வெளியிட்ட செய்தி இந்தியா நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வண்ணம் இருந்ததாகக் கூறி என்.டி.டி.வி இந்திக்கு 24 மணி நேர ஒளிபரப்பு தடை உத்தரவை இந்திய அரசு பிறப்பித்திருந்தது.
மத்திய அரசின் இந்த தண்டனை நடவடிக்கையை மற்ற செய்தி நிறுவனங்கள் வன்மையாக கண்டித்திருந்தன.
இந்த நிலையில், மத்திய அரசின் தடை உத்தரவை ரத்து செய்யும் முயற்சியில் உச்ச நீதிமன்றத்தை என்.டி.டி.வி அணுகியிருந்தது. இந்த மனு குறித்து நாளை விசாரிக்க இருப்பதாக நீதிமன்ற தெரிவித்த நிலையில், மத்திய அரசே இந்த தடை உத்தரவை இடை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

