திருமணத்துக்கு முன் சமையலறையையே பார்க்காத பெண்கள் , திருமணத்துக்கு பின் நன்கு சமைக்கக்கூடிய குடும்பத் தலைவிகளாவது சகஜமாக காணக்கூடிய ஒன்றுதான்.
ஆனால் , திருமணத்துக்கு பின் சமையலைக் கற்றுக்கொண்டு, வீட்டில் சமைப்பதுடன், அந்தக் கலையை ஒரு வணிக ரீதியில் தொடர் ஆரம்பித்து வெற்றி கண்டிருக்கும் சம்பவங்கள் குறைவாகவே இருக்கும்.
அப்படி சமையலை ஒரு பொழுதுபோக்காக துவங்கி, இணையத்திலும், வணிக ரீதியிலும் வெற்றி கண்டிருப்பவர் ஹேமா சுப்பிரமணியன்.
ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் கிடைக்கும் உணவு வகைகளை கூட வீட்டிலேயே எளிதாக சமைக்க கூடிய செயல் முறை விளக்கங்கள் தொடர்ந்து அளித்து வருகிறார் ஹேமா சுப்பிரமணியன்.
சமையல் செய்முறை விளக்க காணொளி காட்சிகளில் இவர் தோன்ற ஆரம்பித்தது கடந்த 2008 ஆம் ஆண்டில். தனது கணவரின் இணையதள நிறுவனத்திற்காக இந்த காணொளி காட்சிகளில் தோன்றிய இவருக்கு, தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அளவுக்கு இவரைப் பின்தொடர்பவர்கள் உள்ளார்கள்.
திருமணத்திற்கு முன்பு வரை பெரும்பாலான பெண்களை போல, தனக்கும் சமைக்கவே தெரியாது என கூறும் ஹேமா சுப்ரமணியன், பின்பு அமெரிக்காவில் கணவருடன் தனி குடித்தனம் நடத்திய காலத்தில் தான் சமையல் கலையில் ஆர்வம் காட்ட தொடங்கியதாக கூறுகிறார்.
ஆரம்ப காலகட்டம் முதலே தனக்கு உணவு மீது அலாதி பிரியம் இருந்ததாகவும், சமையல் கலை மீதும் ஆர்வம் காட்ட தொடங்கிய பின்னர், இதையே தனது தொழிலாக மாற்றிக்கொள்ள முன்வந்ததாகவும் ஹேமா சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேக்கரி தொழிலும் ஈடுப்பட துவங்கியுள்ளதாகவும், பிரௌனிஸ் என அழைக்கப்படும் கேக் வகைகளை மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக விற்பனை செய்து வருவதாக கூறும் ஹேமா சுப்பிரமணியன், பிடித்தமான தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டியது மிக அவசியம் என்கிறார்.
மகளிர் மேம்பாடு என்றாலே சமையல் துறையை தேர்ந்தெடுக்க கூடாது என்பது போன்ற மனநிலை பல்வேறு பெண்களுக்கும் உள்ளதாக குறிப்பிடும் ஹேமா சுப்பிரமணியன், அதன் காரணமாகவே 'செஃப்' என அழைக்கப்படும் சமையல் கலைஞர் துறையை தேர்ந்தெடுக்க பெண்கள் தயங்குவதாகவும் கூறுகிறார்.
முன்னேற்றம் காண்பதற்கு, பிடித்த பொழுதுபோக்கையே தொழிலாக தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலி தனம் என்கிறார் ஹேமா சுப்பிரமணியன்.

